Wednesday, March 25, 2020

துங்கபத்திரா ஆறு


துங்கபத்திரா ஆறு



புராணங்களின் படி வராஹ பர்வதம் என்று இந்த மலைக்கு பெயர்.  இந்த மலையில் மஹா விஷ்ணு வராஹ அவதாரமெடுத்து, ஹிரண்யாக்ஷணை சம்ஹாரத்த போது, ஸ்வாமியின் இடக் கொம்பிலிருந்து வடிந்த வியர்வை துங்கா நதியாகவும், வலது கொம்பிலிருந்து வடிந்த வியர்வை பத்ரா நதியாக பாய்ந்ததாக வரலாறு.

கர்நாடக மாநிலத்திலிருந்து தெலுங்கானா வழியாக ஆந்திரா  மாநிலம் வரை பாயும் இந்த ஆறு துங்கபத்திரா ஆறு என்று அழைக்கப்படுகிறது. இது இந்திய தீபகற்பத்தின் வரலாற்றுப் பின்னணியில் முக்கியமான புனித ஆறாக கருதப்படுகிறது. ஹம்பி நகரம் இந்த ஆற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ளது. துங்கா மற்றும் பத்திரா என்ற இரண்டு ஆறுகள் சேர்ந்து இது உருவானதால் துங்கபத்திரா என்று அழைக்கப்படுகிறது.

பத்ரா ஆறு தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும். இவ்வாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கி தக்காணப் பீடபூமியில் பாய்கிறது.  இதேப்போல் துங்கா ஆறு தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு ஆகும். இவ்வாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் கங்கா மூலா என்னுமிடத்தில் உள்ள "வராக பர்வதம்" என்னும் மலையில் துவங்குகிறது. இதன் நீளம் 147 கிலோமீட்டர்கள் ஆகும். கர்நாடகத்தின் சிமோகா, சிக்மகளூர் மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்து செல்லும் இவ்வாறு சிமோகா நகரத்தில் உள்ள கூட்லி என்னுமிடத்தில் பத்ரா ஆற்றுடன் கலக்கிறது. இவ்விடத்தில் இருந்து இது துங்கபத்ரா ஆறு என்று அழைக்கப் படுகிறது. பின் துங்கபத்ரா ஆறானது கிழக்கு நோக்கி ஓடி ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றுடன் இணைகிறது. இது கிருஷ்ணா நதியின் முக்கியமான கிளை நதியாக கருதப்படுகிறது.

துங்கா ஆற்றின் மீது கஜனூர் என்ற இடத்திலும் துங்கபத்ராவின் மீது ஹோஸ்பேட் என்ற இடத்திலும் அணைகள் கட்டப்பட்டுள்ளன. துங்கா ஆற்றின் மீது சிருங்கேரியில் பல கோவில்கள் உள்ளன. சாரதா கோவிலும் வித்யாசங்கரர் கோவிலும் இவற்றில் குறிப்பிடத் தகுந்தவை.

பத்ரா ஆற்றின் மீது லக்கவல்லி என்னுமிடத்தில் அணை ஒன்றும் கட்டப் பட்டுள்ளது. பின் துங்கபத்ரா ஆறு கிருஷ்ணா ஆற்றுடன் கலந்து கடைசியில் வங்காள விரிகுடாவில் சேர்கிறது.

சரித்திர காலத்தில் விஜயநகர சாம்ராஜ்ய அரசர்கள் பல நீர்வழிகள், கால்வாய்கள் மூலம் இந்த ஆற்றை பயன்படுத்தி கொண்டனர். சாதுரியமாக திட்டமிட்ட நீர் வழிகள் மூலம் அவர்கள் துங்கபத்திரை ஆற்று நீரை அரண்மனை நீர்த்தேவை முழுவதையும் பூர்த்தி செய்யும் நீர்த்தேக்கங்களுக்கு எடுத்து சென்றனர். இது தவிர விஜயநகர ஆட்சியில் வெட்டப்பட்ட விவசாய பாசன கால்வாய்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன என்பது வியப்பளிக்க கூடிய விஷயமாகும். ஹம்பியின் கரையிலிருந்து துங்கபத்திரை ஆற்றை பார்த்து ரசிக்கும் அனுபவமும் இங்கு சுற்றுலா பயணிகளால் விரும்பப் படுகிறது.

முற்காலத்தில் இந்த துங்கபத்திரை ஆறு பம்பா ஆறு என்றே அழைக்கப்பட்டது. புராண ஐதீகங்களின் படி பிரம்மாவின் புத்திரியான பம்பா சிவனை நினைத்து தவம் செய்ததாகவும், அதனால் கவரப்பட்ட சிவ பெருமான் பம்பாவை மணம் செய்து பம்பா பதி (பம்பாவின் கணவன்) என்ற பெயரில் அழைக்கப் பட்டதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. ஹம்பி என்ற பெயர் வருவதற்கு இந்த புராணக்கதையும் ஒரு காரணமாகும். துங்கபத்திரா நதியை ஒட்டி பல சிவன் கோயில்கள் காணப்படுகின்றன.

துங்கபத்ரா நதிக்கரை  இன்றளவும், இயற்கை எழில், புராதானச் சின்னங்கள், தெய்விகம் என அனைத்து குணங்களையும் ஒருங்கே அமையப் பெற்ற துங்கபத்ரா, ஜீவநதியாகவே திகழ்கிறது.

நதியை நன்றியுடன் வணங்குவோம்! பாதுகாப்போம்!

- Dr. P.V. Praveen Sundar MCA,M.Phil (CS), Ph.D (CS)

No comments:

Post a Comment